Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

போக்சோ வழக்கில் கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன் : தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவு

கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்த வழக்கில் கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் பிளஸ் 2 மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த விவகாரத்தில், தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (31) மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (46) ஆகியோரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மீரா ஜாக்சன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, உயிரிழந்த மாணவியின் தந்தை, பள்ளி முதல்வருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறி இடையீட்டு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஷீதா பேகம், “ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை அளித்ததாக முதல்வர் மீரா ஜாக்சனிடம் மாணவி புகார் அளித்துள்ளார். அதன்பிறகும், அந்த ஆசிரியர் மாணவியின் வகுப்பில் பாடம் எடுத்துள்ளார். மேலும், பெற்றோருக்கு தெரியாமல் மாணவிக்கு பள்ளி சார்பில் உளவியல் ஆலோசனை வழங்கியுள்ளனர். பள்ளியின் பெயர், புகழை காப்பாற்றும் நோக்கில் சம்பவத்தை மறைத்துள்ளனர். மாணவி புகார் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் இப்போது உயிரோடு இருந்திருப்பார். முதல்வருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்புள்ளது. வழக்கின் விசாரணை தற்போது முதற்கட்டத்தில் உள்ளது. இதுபோன்று வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என விசாரித்து வருகிறோம். எனவே, மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என்று வாதிட்டார். மீரா ஜாக்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவி உயிரிழந்ததற்கும் முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.குலசேகரன், மாநகர மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஞாயிறுதோறும் காலை மீரா ஜாக்சன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

வெளியான உரையாடல்

இதற்கிடையே, உயிரிழந்த பள்ளி மாணவியும், கைது செய்யப்பட்ட ஆசிரியரின் மனைவியும் செல்போனில் பேசுவது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஒலிப்பதிவு உண்மையானதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இவ்வழக்கு தொடர்பாக, உயிரிழந்த மாணவிக்கு தெரிந்த சிலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x