Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

ரூ.40 லட்சம் மோசடி செய்த ஆசிரியை மீது புகார் :

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(69). இவர், ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

‘ரியல் எஸ்டேட் தொழில் மூலம் வேலூர் அடுத்த பொய்கையைச் சேர்ந்த மனோகரன், குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். நான், எனது மருமகளுக்கு அரசு பணி கிடைக்க முயற்சி எடுத்து வந்தேன். இதையறிந்த மோகன், மனோகரன் ஆகியோர் சென்னையில் பிரபல பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஜெயந்தி என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவர் அரசு துறையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனக்கூறினார்.

மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அதில் ஒன்றை என் மருமகளுக்கு வாங்கி தருவதாக கூறினார். அதற்காக ரூ.40 லட்சம் செலவாகும் எனக்கூறினார். அவர் கேட்டுக்கொண்டபடி பணத்தை தயார் செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரை அரசு பணியை வாங்கித் தரவில்லை.

இதற்கிடையே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் அரசு துறையில் பல்வேறு வேலைகள் காலியாக இருப்பதாக கூறி பல லட்சம் பணம் வாங்கி ஆசிரியை ஜெயந்தி மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

எனவே, அவர் மீது உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x