பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை - டிஐஜி ஆஜராகி சாட்சியம் அளித்தார் : வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை -  டிஐஜி ஆஜராகி சாட்சியம் அளித்தார் :  வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த மார்ச் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இப்பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து முன்னாள் டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இருவர் மீதும் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர். கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆகிய இருவருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில், அரசு தரப்பின் 3வது சாட்சியான காவல்துறை டிஐஜி ஆனி விஜயா நேற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் அளித்த சாட்சியங்களை நடுவர் கோபிநாதன் பதிவு செய்து கொண்டார். சாட்சியம் அளித்த டிஐஜி ஆனி விஜயாவை முன்னாள் எஸ்.பி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது. தொடர்ந்து டிஐஜியிடம் குறுக்கு விசாரணை நடத்த தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கோரிக்கை வைத்தது. அதை ஏற்க மறுத்த நடுவர், இன்றே வேண்டுமென்றால் குறுக்கு விசாரணை செய்யலாம் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு நடுவர் கோபிநாதன் ஒத்தி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in