Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

நெய்வேலியில் இல்லம் தேடி கல்வி கலைக் குழுவுக்கு பயிற்சி :

‘இல்லம் தேடி கல்வி கலைக் குழு’வுக்கு நெய்வேலியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையால் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ கடந்த மாதம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் உட்பட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில், இத்திட்டம் குறித்து கிராம மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திட மேலும் 8 குழுக்களுக்கு 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி நெய்வேலியில் அமைந் துள்ள வட்டம் -9 என்எல்சி நடுநிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு மாவட்ட கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் குணாளன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பூபதி இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசி, பயிற்சியை தொடங்கி வைத்தார். என்எல்சி நிறுவனத்தின் கல்வி துறை செயலாளர் நாகராஜன், கடலூர் மாவட்ட பள்ளி கல்வி துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மாநில பயிற்சியாளர் அரசன் கலந்து கொண்டு பாடல், நடனம், நாடகம், பறை, கரகம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பயிற்சி வழங்கினார். வட்டார வள மைய பயிற்சியாளர் செந்தில், அருணா தேவி ஆகியோர் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில் என்எல்சி கல்வித்துறை முதன்மை மேலாளர் அப்துல் காதர், இத்திட்டத்தின் மாவட்ட உறுப்பினர்கள் சாந்த குமார், பாலகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி கல்வி துறை அதிகாரி காந்திமதி கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் மற்றும் கலை குழு உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் குறித்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் தாமோதரன் நிறைவுரை நிகழ்த்தி பயிற்சியை முடித்து வைத்தார். இப்பயிற்சியில் கடலூர், புவனகிரி, கீரபாளையம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம்,நல்லூர்,மங்களூர் உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் இருந்து நாட்டுப் புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். வட்டார வள மைய பயிற்சியாளர் செந்தில் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x