Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு : 4 மாவட்டங்களின் பயிர்ச்சேத விவரங்கள் அறிக்கையாக சமர்ப்பிப்பு

வேலூர் மாவட்டத்தில் வெள்ள சேத பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தில் நெற்பயிர் சேத விவரங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மத்திய குழுவினரிடம் எடுத்துரைத்தார். அருகில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த் உள்ளிட்டோர். அடுத்த படம்: பொன்னை அணைக்கட்டில் வெள்ள சேதத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர்.படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற் றழுத்த தாழ்வு மண்டலத்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பதிவானது. கடந்த ஒரு வாரமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தவதற்காக மத்திய குழுவினர் வருகை தந்துள்ளனர்.

இதில், வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சக செலவினங்கள் பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் தங்க மணி, எரிசக்தி துறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இவர்களுடன், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

காட்பாடியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களின் பயிர்ச்சேத விவரங்கள் குறித்த அறிக்கையை 4 மாவட்ட வேளாண் அதிகாரிகள் மத்திய குழுவினரிடம் சமர்ப்பித்தனர்.

இதனை தொடர்ந்து, காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட குகைய நல்லூர் கிராமத்தில் வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதமடைந்தது குறித்த விவரங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். மேல்பாடி-பொன்னை இடையிலான சேத மடைந்த தரைப்பாலம், பொன்னை ஆற்றின் குறுக்கே 1857-ம் ஆண்டு கட்டப்பட்ட அணை மற்றும் பொன்னை தரைப்பாலத்தையும் மத்திய குழுவினர் பார்வை யிட்டனர். அப்போது, நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஜெகத் ரட்சகன் (அரக்கோணம்) கதிர் ஆனந்த் (வேலூர்), ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வேலூர் எஸ்.பி., செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை முழுமையாக தெரி வித்து நிவாரணம் கோரலாம் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் சேத விவரங்கள் தொடர்ந்து கணக்கிட வேண்டியுள்ளது. யாரையும் விட்டுவிட மாட்டோம்’’ என தெரிவித்தார்.

பின்னர், ராணிப்பேட்டை மாவட் டத்துக்கு சென்ற மத்திய குழுவினர் பெல் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து புகைப் படங்களை பார்வையிட்டனர். அவர்களிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விளக்கினார்.

மேலப்புலம் புதூர் கிராமத்தில் நெற்பயிர் சேதங்களையும் மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x