Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

கோவையில் மக்கள் சபை மூலம் பெறப்பட்ட 1.41 லட்சம் மனுக்களில் - 25 ஆயிரம் பேரின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு : முதல்வர் பங்கேற்ற விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவையில் மக்கள் சபை மூலம்பெறப்பட்ட மனுக்களில், 25 ஆயிரம் கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவை வஉசி மைதானத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றினார்.

விழாவில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசும்போது, ‘‘பத்து ஆண்டுகளாக காத்திருந்த தமிழகம்,தனக்கான தலைவரை கண்டுள்ளது. கோவையில் 150 இடங்களில்மக்கள் சபை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்களிடம் இருந்து 1.41 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் பேரின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. கோவை தமிழக முதல்வரின் கோட்டை’’ என்றார்.

கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் பேசும்போது, ‘‘கருணாநிதி போலசிந்தனையில் ஒற்றுமை கொண்டவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்’’ என்றார்.

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களோடு நெருக்கமாக இருந்து, அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக இணைந்து பணியாற்றினால், மக்கள் நலனில் இன்னும் வேகமாக பங்கு பெறலாம். இத்தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும்’’ என்றார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக, சென்னையில் இருந்து கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை, திமுக தொண்டா்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். விமானநிலையத்தில் இருந்து வஉசி மைதானம் வரை சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு நின்று, வரவேற்பளித்தனர். விழா அரங்கத்தில் அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அதை முதல்வர் பார்வையிட்டார்.

இவ்விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு(பொதுப்பணித்துறை), தங்கம் தென்னரசு(தொழில்துறை), சு.முத்துசாமி(வீட்டுவசதி), மு.பெ.சாமிநாதன்(செய்தித்துறை), கா.ராமச்சந்திரன்(வனத்துறை), மா.சுப்பிரமணியன்(மருத்துவம்), கயல்விழி செல்வராஜ்(ஆதி திராவிடர் நலத்துறை), எம்.பிக்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கு.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக்(மாநகர் கிழக்கு), சி.ஆர்.ராமச்சந்திரன்(புறநகர் வடக்கு), பையா என்ற ஆர்.கிருஷ்ணன்(மாநகர் மேற்கு), மருதமலை சேனாதிபதி(புறநகர் கிழக்கு), டாக்டர் வரதராஜன் (புறநகர் தெற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்ற ஸ்டாலின்

கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜமாணிக்கம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலராக பணியாற்றியவர். கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வடவள்ளியில் உள்ள ராஜமாணிக்கத்தின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x