Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

காவிரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போலீஸாருக்கு பாராட்டு :

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் உபரி நீர் திறப்பால், காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் காவிரிக் கரையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸார் ரோந்து சென்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீஸார் ரோந்து சென்றபோது, ஆற்றின் அருகே உள்ள பிள்ளையார் கோயில் வழியாக மூதாட்டி ஒருவர் காவிரி ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆற்றில் இறங்கிய பகுதியில், ஆகாயத்தாமரை அதிக அளவில் இருந்ததால், உடனடியாக நீரில் இழுத்துச் செல்லப்படவில்லை.

ரோந்து சென்ற போலீஸார், மூதாட்டி ஆற்றில் இறங்குவதைக் கண்டு, வேகமாக செயல்பட்டு அவரைக் காப்பாற்றி கரை சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல்லைச் சேர்ந்த நாச்சம்மாள் (64) என்பதும், உடல்நிலை சரியில்லாததாலும், குடும்ப பிரச்சினையாலும் தற்கொலை செய்து கொள்ள வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் மூலம் அவரை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வெப்படையில் வசிக்கும் அவரது மகன் ராஜேந்திரனுக்கும், பள்ளிபாளையம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x