Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

கோவிட் கேர் சென்டரில் பணிபுரிந்த செவிலியர்களை - நிலவை ஊதியம் வழங்காமல் பணியில் இருந்து விடுவிப்பதாக உத்தரவு : மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

நிலுவை ஊதியம் வழங்கக்கோரி கோவிட் கேர் சென்டரில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து செவிலியர்கள் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் தற்காலிக அடிப்படையில் கடந்த மே மாதம் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 54 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இச்சூழலில் கடந்த மே, ஜூன் மாதம் மட்டும் ஊதியம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடம் நான்கு முறை கோரிக்கை விடுத்தோம். அப்போது வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வரும் 30-ம் தேதியுடன் கோவிட் கேர் சென்டரில் பணிபுரிந்து வந்த அனைத்து தற்காலிக செவிலியர்களும் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. ஊதிய நிலுவை வழங்காத நிலையில் பணியில் இருந்து எங்களை விடுவிக்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x