Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

திருசெங்கோடு தைலாம்பிகை நகரில் - 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மழைநீரை சேகரிக்கும் மக்கள் :

தைலாம்பிகை நகரில் மழைநீரை சேகரிக்க பொதுமக்கள் அமைத்துள்ள வடிகால் தொட்டி.

நாமக்கல்

திருச்செங்கோடு நகராட்சி 10-வது வார்டில் பொதுமக்கள் ஒன்றிணைந்து ரூ.2.50 லட்சம் மதிப்பில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதில் மழைநீரை சேகரிக்கின்றனர். இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு நகராட்சி 10-வது வார்டு தைலாம்பிகை நகர் 6-வது தெருவில் உள்ள 23 குடியிருப்பு வாசிகள் மழைநீர் வீணாகாத வகையில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதில் மழைநீர் சென்று சேரும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ், வேலுசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மழைநீரை சேகரிக்க வேண்டும், தெருவில் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜஸ்தானில் அமைக்கப் படுவது போல் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கலாம் என இங்குள்ள 23 குடியிருப்புவாசிகளும் முடிவு செய்தோம். இதன்படி ரூ.2.50 லட்சம் மதிப்பில் 165 அடி, 150 அடி ஆழமுள்ள இரு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. அருகில் தொட்டி அமைக்கப்பட்டு குடியிருப்புகளில் இருந்து கிடைக்கும் மழைநீரை இதன்மூலம் நிலத்தடியில் சேகரிக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக பெய்த மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மழைநீர் சேருவதால் தண்ணீரில் உப்புத்தன்மை குறைந்துள்ளது, என்றனர். பொதுமக்களின் இம்முயற்சியை திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ. ஆர். ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x