சரக்கு ஆட்டோவில் 200 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது :

சரக்கு ஆட்டோவில் 200 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது :
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சென்னையில் இயங்கி வரும் மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளர் அக் ஷய் குமார் தலைமையிலான குழுவினர் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் நேற்று காலை வாகன கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஈரோடு மாவட்டம் பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோ ஒன்று தென்னங்கன்றுங்கள் ஏற்றி வருவதைப் பார்த்து தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனை செய்ததில் தென்னங்கன்றுகளுக்கு அடியில் 20 கிலோ எடைகொண்ட 10 மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததைப் பார்த்தனர்.

அதை பிரித்து சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 200 கிலோ கஞ்சா கடத்தியது தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிமலையைச் சேர்ந்த தாமோ தரன் (28), பெருந்துறை தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (25) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கஞ்சா பார்சலுக்கு காவலாக சற்று தொலைவில் 2 பேர் காரில் செல்வது தெரியவந்தது. இதை யடுத்து, அவர்களை தேடிச்சென்று காரை மடக்கினர். காரில் இருந்த ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (54) மற்றும் திருப்பூர் பவானி வட்டத்தைச் சேர்ந்த பாலசந்தர் (35) ஆகியோரை கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேர் மற்றும் கஞ்சா பார்சலுடன் இருந்த சரக்கு ஆட்டோ, காரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்து சென்னைக்குச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in