Published : 20 Nov 2021 03:07 AM
Last Updated : 20 Nov 2021 03:07 AM

திருப்பூர் மாநகராட்சியில் வார்டு வாரியாக - குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க அறிவுறுத்தல் :

திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டத்துக்கு, தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமை வகித்தார். ஆட்சியர் சு.வினீத் முன்னிலை வகித்தார்.

இதில் பங்கேற்ற மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள் பேசியதாவது:

குழந்தைகளுக்கு எதிராக சைபர் கிரைம் குற்றங்கள், இணையத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். இணைய குற்றங்களை தடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ‘ரிசப்ஷன்’ இல்லத்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை, குழந்தைகள் மீதான 195 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 45 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன, என்றனர்.

தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக, குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும். சென்னையில்இம்முயற்சி நிறைவேறவில்லை. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதால் இங்கு இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். அரசாணைப்படி மாநகராட்சி பகுதிகளில் மண்டல அளவில் குழுக்கள் அமைத்தால் போதும். வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும்போது, விழிப்புணர்வு பெருகும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x