Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

காட்பாடி பிடிஓ அலுவலக வங்கி கணக்கில் இருந்து - ரூ.70 லட்சம் திருடிய 3 இளைஞர்கள் கைது :

காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக வங்கி கணக்கில் இருந்து ரூ.70 லட்சம் தொகையை ஆன்லைன் மூலம் திருடியதாக 3 இளைஞர்களை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடிக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இதில், ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானதை கடந்த 15-ம் தேதி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு புகார் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் அபர்ணா, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமை யிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த பூவரசன் என்பவரது வங்கி கணக்குக்கு ரூ.50 லட்சமும், காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் வங்கியின் கணக்குக்கு ரூ.20 லட்சம் மாற்றப்பட்டது தெரியவந்தது. ஆனால், தனியார் வங்கிக்கணக்குக்கு அந்தப் பணம் சேராமல் இருந்தது. ரூ.35 ஆயிரம் பணத்தை இருதினங்களுக்கு முன்பு எடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து பூவரசனை இருதினங்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் பிரபு, ஜீவா ஆகியோரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறை யினர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அருகேயுள்ள விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (23). எம்.எஸ்.சி கிரிமினாலஜி படித்துள்ளார். திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (33). இவர், அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் வாணியம்பாடி ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (22) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து அரசு கருவூலம் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வழங்கப்படும் நிதியை ஆன்லைன் மூலம் திருட முடிவு செய்தனர். இதற்காக ஆன்லைனில் மோசடி செய்து வரும் நபரை நாடியுள்ளனர். அந்த மோசடி நபர் மூலம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வங்கி பணப் பரிமாற்ற ரகசிய எண் மற்றும் காட்பாடி சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் உள்ள பண பரிமாற்ற ரகசிய எண் ஆகியவற்றை திருடியுள்ளனர். பின்னர், அவர்கள் 12-ம் தேதி மாலை ரகசிய எண்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை இரண்டு வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர்’’ என்றனர்.

பணத்தை எடுக்க முயன்றபோது அனைவரும் சிக்கிக்கொண்டனர். பூவரசன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் தொகையும், காட்பாடி தனியார் வங்கிக்கணக்கு சென்ற ரூ.20 லட்சம் தொகையும் மீண்டும் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக வங்கி கணக் குக்கு மாற்றியுள்ளனர். மேலும், உடந்தையாக இருந்த ஆன்லைன் மோசடி நபரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x