Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்திலேயே ஆலங்காயம் பகுதியில் அதிகபட்சமாக 134 மி.மீ., மழை பெய்தது. திருப்பத்தூர் நகரப் பகுதியில் விடிய,விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மழைநீரால் சூழ்ந்தது.

கருப்பனூர் சாலை, பசுமைநகர், எழில்நகர், எம்ஜிஆர்நகர், அண்ணா டப்பட்டி, என்ஜிஓ நகர், தென்றல் நகர் உள்ளிட்ட இடங்கள் மழைநீரால் சூழப்பட்டு குட்டி தீவுப்போலானது. தகவலறிந்த,திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரப்பர் படகு மூலம் அங்குள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

திருப்பத்தூர் நகரில் உள்ள திருமண மண்டபம், பள்ளி வளாகம், சமுதாய கூடங்களில் முகாம் அமைக்கப்பட்டு மழை காரணமாக அங்கு தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் தேவையான உதவிகளை செய்தனர். திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சவலூர் செல்லும் பாதை கனமழையால் துண்டிக்கப்பட்டது. இதனால், அவ் வழியாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

ஜோலார்பேட்டை ஒன்றியத் துக்கு உட்பட்ட கோடியூர் ஏரி கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிரம்பியது.

அதேபோல கட்டேரி ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறி மழைநீர் ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார்.

தொடர் மழை காரணமாக 20-ம் தேதி (இன்று) திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா விடுமுறை அறிவித்துள்ளார்.

மழையளவு விவரம்

ஆலங்காயம் 134 மி.மீ., ஆம்பூர் 85.7, வடபுதுப்பட்டு 102.6, நாட்றாம்பள்ளி 112.8, கேத்தாண்டப்பட்டி 113, வாணியம்பாடி 126.2, திருப்பத்தூர் 124.2, என மழையளவு பதிவாகி யிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x