Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
சென்னை அரும்பாக்கம் கண்ணன் பாலா நகரில் வசந்தம் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளது. சென்னை மேற்கு அண்ணா நகரில் மகாலட்சுமி பில்டர்ஸ் மற்றும் லேண்ட் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம் உள்ளது.
இந்த இரு நிறுவனங்களிலும் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய 8 இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஒரு இடத்துக்கு 6 பேர் வீதம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜவகர். இவர் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு ‘பயமா இருக்கு’ என்ற திரைப்படத்தையும் இயக்கி தயாரித்துள்ளார். மகாலட்சுமி பில்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லோகேஷ். இவர் சென்னை கிழக்கு பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் வந்த வருமானத்தை குறைத்துக் காட்டி, வேறு பல நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் இவர்கள் மீது புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்றைய சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த ஆவணங்களை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT