Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி - வாரத்தில் 3 நாள் தொழில் நிறுத்தம் : விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

`நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொழில் நிறுத்தம் செய்வது’ என, சங்கரன்கோவில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங் களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளரும், சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் செயலாளருமான டி.எஸ்.ஏ.சுப்பி ரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவுத் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 6 மாதத்துக்கு மேலாக நூல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால், நெசவுத்தொழில் நடத்துவது மிகவும் கடினமாக மாறி வருகிறது. நூல் விலை உயர்வைக் கண்டித்து, இனி வரும் நாட்களில் வாரம் 4 நாட்கள் மட்டுமே உற்பத்தி செய்ய சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

வாரந்தோறும் வெள்ளி ,சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவால் நெசவுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாழக்கிழமை (இன்று) தொழில் நிறுத்தம் செய்து, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x