திருநெல்வேலி, தென்காசியில் மழையின் தீவிரம் குறைந்தது  :  பாபநாசம் அணைக்கு 3,693 கனஅடி நீர் வரத்து

திருநெல்வேலி, தென்காசியில் மழையின் தீவிரம் குறைந்தது : பாபநாசம் அணைக்கு 3,693 கனஅடி நீர் வரத்து

Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து ள்ளது. தொடர் மழையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. மழையின் தீவிரம் நேற்று சற்று குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கொடுமுடியாறு அணையில் 5 மி.மீ. ராதாபுரத்தில் 3, பாபநாசத்தில் 2, சேர்வலாறில் 1 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3,693 கனஅடி நீர் வந்தது. 3,528 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 138.10 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.42 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 742 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 90.10 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 24.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையில் 15 மிமீ, கடனாநதி அணையில் 6, தென்காசியில் 4.80, குண்டாறு அணையில் 4, கருப்பாநதி அணையில் 3, சிவகிரியில் 1.20, செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. இதனால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப் படுகிறது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 335 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 50 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 131 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 72 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 93 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in