Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

கிருஷ்ணகிரியில் சாலைகளில் வீசப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளால் சீர்கேடு :

கிருஷ்ணகிரி நகராட்சியில் சாலையோரம் வீசப்படும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை 12-வது வார்டுக்கு உட்பட்ட ஆறுமுக தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பையை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முறையாக சேகரிப்பதில்லை என புகார் உள்ளது. இதனால் குடியிருப்போர், குப்பையை சாலையோரங்களில் வீசிச் செல்கின்றனர். தற்போது பெய்து வரும் மழையில் குப்பை கழிவுகள் சாலையில் சிதறி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், பழையபேட்டை குப்பம் சாலையில் முன்பு கோழி இறைச்சிகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கொட்டுவதால் அவ்வழியே செல்வோர், பள்ளி மாணவ, மாணவிகள் அவதியுற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, நகராட்சியில் இருந்து குப்பை சேகரிக்க யாரும் வருவதில்லை. மாறாக ஒரு சில பகுதியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் சேகரிப்படும் குப்பையை, இங்கேயே வீசிச் செல்கின்றனர்.

மேலும், நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே கோழி இறைச்சி கழிவுகள் மர்ம நபர்கள் கொட்டிச் செல்கின்றனர். இதனால் பள்ளிக்குள் செல்லும் மாணவ, மாணவிகள் அவதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி எளிதாக நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x