Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM

திருக்கல்யாண வைபவம் :

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கப்பெருமான்- தெய்வானை அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி/திருநெல்வேலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்றுமுன்தினம் (நவ.9) நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்து சேர்ந்தார். மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார்.

மாலை 6 மணியளவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவி ல்லை.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் குறுக்குத் துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை 8 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், சுவாமி காட்சி கொடுக்கும் வைபவமும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் இரவு 7 மணிக்கு ஆறுமுகநயினார் சந்நிதியில் சுவாமி தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x