வேலூர் அருகே - மாயமான மெக்கானிக் கொலை :

வேலூர் அருகே  -  மாயமான மெக்கானிக்  கொலை :
Updated on
1 min read

வேலூரில் மாயமான மெக் கானிக்கை நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொலை செய்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அடுத்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் பாலமுருகன் (20). இவர், ஏற்கெனவே தோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வந்தபோது கடந்த 2019-ம் ஆண்டு சுகுமார் என்பவர் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது பெற்றோருடன் பெருமுகை பகுதிக்கு குடியேறி விட்டார். ஆனாலும், அவ்வப்போது தோட்டப்பாளையம் பகுதிக்குச் சென்று நண்பர்களை சந்தித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 28-ம் தேதி முதல் பாலமுருகனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கோவிந்த ராஜ், கடந்த 6-ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் மாயமான பாலமுருகன் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் நண்பர்கள் குணா, மதிவாணன், ஜெகதீசன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில், கடந்த மாதம் 28-ம் தேதி ரிவர்வியூ ஹோட்டலின் பின்புறம் உள்ள பகுதிக்கு பாலமுருகனை வரவழைத்து 3 பேரும் சேர்ந்து கொலை செய்து உடலை அங்கேயே புதைத்துவிட்டதாக தெரிவித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு சுகுமார் கொலைக்கு பழிவாங்கவே பாலமுருகன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர். 3 பேரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் பாலமுருகன் உடலை புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட் டுள்ளனர். இன்று (நவ.10) அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in