Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

செய்யாறு அருகே விபத்து - கார் மீது வேன் மோதியதில் தாத்தா, பேரன் உயிரிழப்பு : 2 சிறுமிகள் உட்பட 5 பேர் படுகாயம்

செய்யாறு அருகே கார் மீது வேன் மோதிய விபத்தில் தாத்தா மற்றும் அவரது பேரன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 2 சிறுமிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில் வசிப்பவர் கார் ஓட்டுநர் இளங்கோவன். இவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக காரில் நேற்று சென்றுள்ளார். அந்த காரில், அவரது மனைவி சுகன்யா, மகன் விஷ்வா, மகள்கள் நிலா, கமலி, இளங்கோவனின் சித்தப்பா குழந்தைவேலு, அவரது மனைவி புஷ்பா ஆகியோர் பயணம் செய்தனர். காஞ்சிபுரம் – செய்யாறு சாலையில் மாமண்டூர் கிராமம் அடுத்த 3 கண் பாலம் அருகே கார் சென்றுள்ளது.

அப்போது பெரணமல்லூரில் இருந்து சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற் சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, கார் மீது மோதியது. இதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் உருண்டு அப்பளம்போல் கார் நொறுங்கியது. விபத்தில் ஓட்டுநர் இளங்கோவனின் மகன் விஷ்வா(8) மற்றும் அவரது சித்தப்பா குழந்தைவேலு(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் தூசி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்தில் சிக்கிய குழந்தைவேலுவின் மனைவி புஷ்பா(50), இளங்கோவன்(33), அவரது மனைவி சுகன்யா(30), மகள்கள் நிலா(5), கமலி(3) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தூசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x