திருச்செங்கோடு அருகே - நிலம் அளக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது :

திருச்செங்கோடு அருகே -  நிலம் அளக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது :
Updated on
1 min read

நிலத்தை அளந்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது நிலத்தை சீர்திருத்தம் செய்ய நிலத்தை அளவீடு செய்வதற்காக எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விண்ணப்பம் செய்துள்ளார். எனினும் நடவடிக்கை இல்லை.

மீண்டும் அவரை அணுகியபோது, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும், அப்போது தான் நிலத்தை அளந்து கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ராஜா இதுதொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அளித்த அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம், ராஜா கொடுத்துள்ளார்.

அதை வாங்கியபோது மாறுவேடத்தில் அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in