Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

கடனை வசூலிக்கச் சென்ற நிதி நிறுவன ஊழியர் கொலை : சுந்தரபாண்டியபுரத்தில் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆலடியூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராமசுப்பிரமணியன் (29). இவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலையில் தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வசித்து வரும் சண்முகநாதன் (38) என்பவரது வீட்டுக்கு கடன் தவணை வசூலிக்கச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சண்முகநாதனின் மனைவி, தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடன் தவணையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார்.

பல முறை கேட்டும் பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்ததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சண்முகநாதன் மனைவியை ராமசுப்பிரமணியன் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சண்முகநாதன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராமசுப்பிரமணியனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத் தில் உள்ளவர்கள், சாம்பவர்வட கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீ ஸார் விரைந்து சென்று, ராமசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகநாதனை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பிரச்சினையில் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை யாளியும், கொலையானவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x