Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM

ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம் விவசாயிகளுக்கு வழங்க அரசுக்கு கோரிக்கை :

விவசாய கிணறுகளில் டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கோரி தமிழ்நாடு விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

தமிழகத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்காமல் உள்ள ஏராளமான விவசாயிகள் டீசல் இன்ஜினை பயன்படுத்தி தண்ணீர் இரைத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் அனைத்து விவசாயத் தோட்டங்களிலும், டிராக்டர்கள், நாற்று நடும் இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு விவசாய கருவிகள் டீசலைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டு வருகிறது. இதனால் அதிக விலை கொடுத்து டீசலை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் உற்பத்தி செலவு மிக அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் கரோனா, இயற்கை சீற்றங்கள், விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

எனவே, டீசல் இன்ஜின்களை பயன்படுத்தும் விவசாயிகளை அரசுத்துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுத்து, புள்ளி விவரங்கள் அடிப்படையில் அவர்களுக்கென தனி அடையாள அட்டைகள் வழங்கி டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மட்டும் ஒரு லிட்டர் டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்சம் ரூ.75 மானியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளையில் டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே இருப்பதால் டீசல் இன்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது 100 சதவீதம் மானியத்துடன் சூரிய மின் மோட்டார் அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x