Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள - படைவீடு கோயில் யானையின் எடை 5,260 கிலோ :

திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு யோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் உள்ள லட்சுமி என அழைக்கப்படும் யானையின் உடல் எடை 5,260 கிலோ என நேற்று தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படைவீடு கிராமத்தில் யோக ராமச்சந்திர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், லட்சுமி என்ற பெயரில் 26 வயது உள்ள பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. லக்னி என்ற பெயருடன் கொண்டு வரப்பட்ட யானையை, லட்சுமி என அன்பாக கிராம மக்களும், பக்தர்களும் அழைக்கின்றனர். 6 வயதில் வருகை தந்த, யானையின் தற்போதைய வயது 26. படைவீடு ரேணுகாம்பாள் கோயில் மற்றும் விநாயகர் கோயில் விழாக்களுக்கு யானை லட்சுமி சென்று வருகிறது.

டிவிஎஸ் அறக்கட்டளை மூலம் யானை பராமரிக்கப்படுகிறது. இதற்காக, மாதம் ரூ.2 லட்சம் செலவிடப்படுகிறது. 2 பாகன்களை கொண்டு, யானையை குளிக்க வைத்தல், உணவு வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த பணி நிறைவு பெற்ற மாவட்ட வன அலுவலர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் தினசரி கண்காணிக்கின்றனர். இதேபோல், 15 நாட்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை மற்றும் 6 மாதங்களுக்கு ஒரு முறை எடை பரிசோதனையை கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் செய்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு ஒரு முறை வனத்துறையினரும், யானையை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

இந்நிலையில் யானை லட்சுமியின் உடல் பரிசோதனை நேற்று முன்தினம் செய்யப்பட்டுள்ளது. அதில் யானையின் உடல் நன்றாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தவாசலில் உள்ள எடை மேடையில், அதன் உடல் எடையின் அளவு நேற்று சரிபார்க்கப்பட்டது. அதில், 5,260 கிலோ எடை இருந்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி 5,085 கிலோவும் மற்றும் புத்துணர்ச்சி முகாமுக்கு சென்று திரும்பியபோது கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி யானை லட்சுமியின் எடை 5,200 கிலோ இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x