Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

கீழ்பென்னாத்தூர் அருகே - மளிகை கடை உரிமையாளர் வீட்டில் : 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு :

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.5 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமம் சிவம் நகரில் வசிப்பவர் முனுசாமி(43). இவர், சென்னையில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டை, அவரது தந்தையான விவசாயி கஞ்சமலை பராமரித்து வருகிறார்.

இதையொட்டி, வீட்டின் மின்விளக்குகளை நேற்று முன்தினம் மாலை கஞ்சமலை எரிய வைத்துள்ளார். பின்னர், அதனை அணைப்பதற் காக நேற்று காலை சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கீழ் பென்னாத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், வீட்டின் பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x