Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM

அடவிநயினார் அணையில் 70 மி.மீ. மழை :

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 70 மி.மீ. மழை பதிவானது. ஆய்குடியில் 41 மி.மீ., தென்காசியில் 22 மி.மீ., செங்கோட்டையில் 16 மி.மீ., குண்டாறு அணையில் 14 மி.மீ., கருப்பாநதி அணையில் 13 மி.மீ., கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 10 மி.மீ., சங்கரன்கோவிலில் 9 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 82.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 117 கனஅடி நீர் வந்தது. 90 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 74 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 74 அடியாக இருந்தது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.56 அடியாக இருந்தது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 127 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

மழை நீடித்தால் கடனாநதி அணை, கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை ஆகியவை ஓரிரு நாட்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x