Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

ஒற்றைச் சாளர முறையில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும் : வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

தமிழகத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதை எளிமைப்படுத்த ஒற்றைச் சாளர முறை கொண்டு வரப்படும், என வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தகுதியானவர்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதல்வர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறைகளை ஆய்வு செய்து வருகிறார். அதிகாரிகள் இதற்கான முழு கவனத்தை செலுத்தி நடவடிக்கை எடுத்து பணிகளை செய்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினை, சாக்கடை பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் இரண்டு பேருந்து நிலையம் புதிதாக அமைய உள்ளது. தமிழகத்தில் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. எனினும், நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

தமிழகத்தில் வீடு கட்டுவதற்காvன அனுமதி பெறுவதை எளிமைப்படுத்த ஒற்றைச் சாளர முறை கொண்டு வரப்படும். தமிழகம் முழுவதும் 195 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 50 மோசமாக, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இவை 2 ஆண்டுகளில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x