Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

தொழில் பயிற்சி நிலையங்களில் - மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்படும் : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

தமிழகத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.வி.கணேசன் கூறியது:

தமிழகத்தில் உள்ள 90 அரசு தொழில் பயிற்சி மையங்களிலும் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டையில் உள்ள வசதிகளின் அடிப்படையில் கூடுதலாக 400 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தெந்த பகுதியில் எந்தெந்த பயிற்சிக்கு வரவேற்பு உள்ளதோ அத்தகைய பயிற்சிகளை அளித்து, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து, விராலிமலை அரசு தொழில்பயிற்சி நிலையத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தொழில்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.ராமர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x