Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

திருச்சி மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு - ரூ.66.09 கோடி இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு :

திருச்சி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்திப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்த 23,893 விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்திப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக நெற்பயிர் சாகுபடி செய்த 11,305 விவசாயிகளுக்கு ரூ.19.05 கோடி, மக்காச்சோளம் பயிரிட்ட 11,938 விவசாயிகளுக்கு ரூ.45.36 கோடி, பருத்தி சாகுபடி செய்த 650 விவசாயிகளுக்கு ரூ.1.68 கோடி என மொத்தம் 23,893 விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் 2021-22-ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர்க் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல், பிர்கா அளவில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு விவசாயிகள், குத்தகைதாரர்கள் பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் இணைந்து கொள்ள முன்மொழிவு படிவம், விண்ணப்பப் படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்களை அணுகலாம்.

இத்திட்டத்தில், நெற் பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.537, பருத்தி பயிருக்கு ரூ.585.87 செலுத்தி நவ.15-ம் தேதிக்குள்ளும், மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.373.50 செலுத்தி நவ.30-ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர்க் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும். எனவே, விவசாயிகள் அனை வரும் நிகழாண்டில் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x