Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

தமிழகத்துக்கு 35 ஆயிரம் டன் உரம் கூடுதலாக வழங்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்துக்கு கூடுதலாக 35 ஆயிரம் டன் உரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 2.72 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் பயிர்களின் சாகுபடி மொத்த பரப்பு 55.5 லட்சம் ஏக்கரை தாண்டியுள்ளது.

எனவே, யூரியாவுக்கான தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 4.911 லட்சம் டன் யூரியா வழங்க திட்டமிட்டது.

ஆனால், உர நிறுவனங்கள் இதுவரை 3.852 லட்சம் டன் யூரியாவை மட்டும் வழங்கியுள்ளன. அதேபோல, இந்த காலகட்டத்தில் வழங்க வேண்டிய 1.47 லட்சம் டன் டிஏபி உரங்களில், 1.15 லட்சம் டன் உரத்தையே வழங்கியுள்ளதால், அதிலும் 32 ஆயிரம் டன் பற்றாக்குறை உள்ளது.

அக்டோபர் மாதத்துக்கான வழங்கல் திட்டத்திலும் தேவையான அளவை விட குறைவான அளவில் யூரியா மற்றும் டிஏபி உரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யூரியா மற்றும் டிஏபி உரங்களின் பற்றாக்குறை தானிய விளைச்சலைக் கடுமையாக பாதிப்பதுடன் விவசாயிகளின் வருவாயையும் பாதிக்கும்.

எனவே, திட்டமிட்டபடி யூரியாவையும், கூடுதலாக 25 ஆயிரம் டன் டிஏபி உரங்களையும், 10 ஆயிரம் டன் எம்ஓபி உரங்களையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சரிடம் வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x