Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM

சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் வேல்முருகன் எம்எல்ஏ ஆஜர் :

சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்ட வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வேல்முருகன் எம்எல்ஏ உள்பட 12 பேர் நேற்று ஆஜராகினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கடந்த 2018-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சுங்கச்சாவடி அடித்து உடைக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை கடந்த 7-ம் தேதி உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகசுந்தரம் முன்னிலையில் வந்தபோது அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களின் வழக்கை விசாரிக்க மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு முழு அதிகாரமும் இருப்பதால் இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று முதல் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த விசாரணையின்போது வேல்முருகன் எம்எல்ஏ உள்ளிட்ட 12 பேர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், இவ்வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x