Published : 19 Oct 2021 03:09 AM
Last Updated : 19 Oct 2021 03:09 AM

3 வாரங்களாக மக்கள் குறைதீர் கூட்டம் - மனுக்கள் மீது தீர்வு காணாவிட்டால் நடவடிக்கை : அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக, ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக கூட்டம் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் ஏற்கெனவே அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி கேட்டறிந்தார். இதற்கு அதிகாரிகள் அளித்த பதில் திருப்தியளிக்காததால், ஆட்சியர் அதிருப்தி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும். தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது என்றால், அதற்கு தகுந்த காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியாதபட்சத்தில் நன்கு விவரம் தெரிந்தவர்களை அனுப்பி வைக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x