Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-2022-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தால் அவர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலுபவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகைகளை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான மாணவ, மாணவியர் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு நவம்பா் 15-ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு நவம்பா் 30-ம் தேதி வரையிலும் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியருக்கு தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் பாா்வையிடலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x