Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM

புரட்டாசி கடைசி சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு :

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் வழிபாடு நடத்தவும், பக்தர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் கடந்த சனிக்கிழமைகளில் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியளித்து அரசு உத்தரவு பிறப்பித்ததது. இதையடுத்து, புரட்டாசி மாத கடைசி சனிக் கிழமையான நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலை முதல் பக்தர்கள் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. பெருமாளை வழிபட பல கோயில்களில் பக்தர்கள் நாள் முழுவதும் வந்த வண்ணம் இருந்தனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரி நாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x