Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

கோவை மாநகராட்சியின் 7 வார்டுகளில் - முதல் தவணை தடுப்பூசி பணி 100 சதவீதம் நிறைவு : சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு

கோவை மாநகரில் 7 வார்டுகளில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப் பட்டதை பாராட்டி, சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டப் பகுதிகளில் 90 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநகரில் 11, 23, 24, 60, 64, 66, 96 ஆகிய வார்டுகளில் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைப் பாராட்டி, அவிநாசி சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், சுகாதாரப் பணியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, நகர் நல அலுவலர் சதீஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “பிற வார்டுகளிலும் தகுதியுடைய அனைவருக்கும் அடுத்த சில தினங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும். தொடர்ந்து பொதுமக்களை அணுகுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்காணித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பிட்ட வார்டுகளில் இலக்கை எட்டியதற்கு இதுவும் முக்கிய காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் விருப்ப மில்லாதவர்கள், தடுப்பூசி வேண்டாம் என மருத்துவரிடம் சான்று பெற்றவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை.

மேலும், வார்டுகளில் தனியார் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக நடத்தப்பட்ட முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் கள் மாநகராட்சி கணக்கில் வருவதில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x