Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் - மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றிய திமுக :

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 6 மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் 2 கட்டகளாக நடைபெற்றது. 13 மாவட்ட கவுன்சிலர், 125 ஒன்றிய கவுன்சிலர், 208 ஊராட்சி மன்ற தலைவர், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,125 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 74 பேரும், 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மாதனூர் ஒன்றியத்தில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, 124 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 481 பேரும், 208 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, 205 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 767 பேரும், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 186 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 1,593 பேர் என மொத்தமுள்ள 2,125 காலி பதவிகளுக்கு 190 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 1,935 பதவி இடங்களுக்கு 6,487 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், மாதனூர், ஆலங்காயம் ஆகிய 2 ஒன்றியங்களுக்கு கடந்த 9-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு, வாக்குபெட்டிகள் பாதுகாப் புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப் பட்டன.

திருப்பத்தூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் குரிசிலாப்பட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது.

அதேபோல, ஜோலார்பேட்டை ஒன்றியத்துக் கான வாக்குகள் அக்ராஹரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியி லும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்துக் கான வாக்குகள் நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யிலும், கந்தலி ஒன்றியத்துக்கான வாக்குகள் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாதனூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆம்பூர் ஆணைக்கார் ஓரியன்டல் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்காயம் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று எண்ணப்பட்டன. 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங் களிலும் டிஎஸ்பி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்துக் குள் அடையாள அட்டையுடன் வந்த முகவர்கள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். கைபேசி, தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக் கப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக வாக்குச்சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அந்தந்த வேட்பாளர் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. எண்ணி முடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீண்டும் தனித்தனி கட்டுகளாக கட்டப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை பணியில் 3,438 அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 567 சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று காலை தாமதமாக தொடங்கப்பட்டு, பிற்பகல் 2 மணி வரை மந்தமாகவே நடைபெற்றது. கந்திலி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை விறு,விறுப்பாக நடைபெற்று, மாலை 3 மணிக்கு பிறகு ஒவ்வொரு பதவிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வெற்றி, தோல்வியே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வெற்றி, தோல்வி பெரிய அளவில் எதிர் பார்க்கப்படவில்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவியும், கந்திலியில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவியும், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், ஆலங்காயம், மாதனூர் ஆகிய ஒன்றியங்களில் தலா 2 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக போட்டியிட்டவர்களில் திமுக கூட்டணி கட்சியினரே அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தனர்.

அதேபோல, ஒன்றிய கவுன்சிலர் பதவியில், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 25 பதவியும், கந்திலி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், நாட்றாம்பள்ளியில் 15 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், மாதனூரில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், ஆலங்காயத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 124 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட்டதில் 6 ஒன்றியங்களிலும் திமுக வேட்பாளர்களே அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு அந்தந்த தேர்தல் அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியில் வெற்றி பெற்ற திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகாமையிலேயே கூடி பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x