Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு :

முறையான ஊதியம் வழங்கக்கோரி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 115 தூய்மைப்பணியாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களில் 50 பேர் தூய்மைப் பணியிலும், மீதமுள்ளவர்கள் பாதுகாப்பு பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு நிர்ணயித்த ஊதியத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் வழங்கவில்லை. கரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூடுதல் நேரம் வேலை செய்ததற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளர்கள் புகார் எழுப்பினர். இதுதொடர்பாக கடந்த மாதம் 27-ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தனியார் நிறுவன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது ஊதிய பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x