Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற2 வீராங்கனைகளுக்கு பணி : முதல்வர் நியமன ஆணைகளை வழங்கினார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுபா, தனலட்சுமி ஆகிய இரு வீராங்கனைகளை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று பதக்கங்கள் வென்று பெருமை சேர்க்கும் வகையில், அவர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டு உபகரணங்களை வழங்குதல், வெற்றி பெறும் வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெ.சுபா, எஸ்.தனலட்சுமி ஆகியோர் கடந்த ஜூலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்று பெருமை சேர்த்தனர்.

அவர்களை கவுரவப்படுத்தும் வகையில், இருவருக்கும் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x