Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

நியாய விலை கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து - செய்யாறில் பொதுமக்கள் சாலை மறியல் : விற்பனையாளர் மீது சரமாரி குற்றச்சாட்டு

செய்யாறில் நியாய விலை கடையில் சரியாக பொருட்கள் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் காந்தி சாலையில் கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடைஇயங்குகிறது. கடையின் விற்பனையாளராக பாலசுப்ரமணியம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், நியாய விலை கடைக்கு சரியாக வராமலும் மற்றும் பொருட்களை சரியாக வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நியாய விலை கடையில் பொருட்களை வாங்க நேற்று பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது, பொருட்களை வழங்காமல் பொதுமக்களை விற்பனையாளர் பாலசுப்ரமணியம் நீண்ட நேரம் காக்கவைத்தாக கூறப்படுகிறது. மேலும், பல பொருட்கள் இல்லை என கூறி அலட்சியமாக செயல்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காந்தி சாலையில் திடீர்மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நியாய விலை கடை விற்பனையாளரின் செயல்பாடு மோசமாக உள்ளது என குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்துசெய்யாறு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், நியாய விலை கடையில் அனைத்து பொருட்களும் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

மேலும், மாற்று விற்பனை யாளரை வரவழைத்து பொருட்களை வழங்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x