Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

சேலம் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் - வாக்கு எண்ணும் மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு :

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குஎண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு தேர்தல் அலுவலரும், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநருமான செல்வம் தலைமையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவி, 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, தலா ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளிட்ட 24 பதவிகளுக்கு இடைத்தேர்தல்வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 195 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள், அந்தந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்ற வாக்குப்பெட்டிகள், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 3 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவல் உதவி ஆணையர் தலைமையில், இன்ஸ்பெக்டர், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உள்ளிட்ட 13 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, பனமரத்துப்பட்டி, நங்கவள்ளி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏடிஎஸ்பிதலைமையில், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ-க்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சுமார் 700 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸார், தீயணைப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x