விழுப்புரம் மாவட்டத்தில் - தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு :

மணிவாசகம்
மணிவாசகம்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக வா.பகண்டை அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர்மணிவாசகம் (55) நியமிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் இருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக அருகேயுள்ள பொம்பூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்துக்கு அழைத்துசென்றுள்ளனர். மருத்துவமனையில் மணிவாசகம் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மயிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஆசிரியர் மணிவாசகம் விழுப்புரம் மாவட்டம் வா.பகண்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளாதார ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். தனது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in