Published : 09 Oct 2021 03:12 AM
Last Updated : 09 Oct 2021 03:12 AM

அரசு நிர்ணயித்த விலையில் - 12-ம் தேதி வரை பாசிப்பயறு கொள்முதல் :

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பாசிப்பயறு மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்யவுள்ளது. நாமக்கல் மாவட்டத்துக்கு கொள்முதல் இலக்காக 250 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாசிப்பயறு விலை 1 கிலோ ரூ.65 முதல் ரூ.68 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ பாசிப்பயறு விலை ரூ.72.75 என கொள்முதல் செய்யப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் புதன்சந்தையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள், நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். வரும் 12-ம் தேதி வரை நடக்கவுள்ள பாசிப்பயறு கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x