Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் - முதற் கட்ட தேர்தலில் 78.88 சதவீதம் வாக்குப்பதிவு :

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதற் கட்ட தேர்தலில் 78.88 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற் றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 4 ஒன்றியங்களில் 9 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 58 பேரும், 83 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 341 பேரும், 137 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 135 பதவிகளுக்கு 479 பேரும், 1,188 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 111 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 1,077 இடங்களுக்கு 3,442 பேர் என மொத்தம் 1,304 பதவிகளுக்கு 4,320 பேர் போட்டியிட்டனர்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு முன்பாகவே ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடிகள் மூடப்பட்டதால் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

காலையில் அமைதியாக தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் பதற்றத்துடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி 62 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அறிவித்தது. வாக்குப்பதிவு முடிவு பெற்ற பிறகு அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் முன்னிலையில், மண்டல அலுவலர்கள் மேற்பார்வையில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. வரும் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் 5 நாட்களுக்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, 4 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின் இறுதிக்கட்ட நிலவரம் நேற்று காலை வெளியிடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

திருப்பத்தூர் ஒன்றியத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 87 ஆயிரத்து 709 பேர் வாக்களித்துள்ளனர். ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 750 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1 லட்சத்து 9 ஆயிரத்து 703 பேர் வாக்களித்துள்ளனர்.

கந்திலி ஒன்றியத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 651 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 95 ஆயிரத்து 755 பேர் வாக்களித்துள்ளனர். நாட்றாம் பள்ளி ஒன்றியத்தில் 77 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், 61 ஆயிரத்து 34 பேர் வாக்களித்துள்ளனர். 4 ஒன்றியங் களிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இறுதி கட்ட நிலவரப்படி 4 ஒன்றியங்களில் 78.88 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அதி காரிகள் தெரிவித்தனர்.

வரும் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் 5 நாட்களுக்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x