Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

கிருஷ்ணகிரி அணைக்கு - நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 768 கனஅடியாக அதிகரித்தது.

மேலும், அணையில் இருந்து நீர் திறப்பு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்னர் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது.

இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பாசன கால்வாய்கள், தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு விநாடிக்கு 410 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 347 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையாலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 640 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து உயரத் தொடங்கியது. நேற்று மதியம் அணைக்கு விநாடிக்கு 768 கனஅடி தண்ணீர் வந்தது.

அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கும், தென்பெண்ணை ஆற்றிலும் விநாடிக்கு 768 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கெனவே, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறை அலுவலர்கள் விடுத்திருந்தனர். வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x