Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

அரசு திட்டங்களில் 5% ஒதுக்கீடு கோரி - மாற்றுத்திறனாளிகள் போராட்டம் :

பெரம்பலூர்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. வட்டார அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், ரமேஷ், ரேவதி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை திட்டத்தில் 100 நாட்களும் வேலை வழங்க வேண்டும். நாளொன்றுக்கு 4 மணிநேரம் வேலை, அரசு நிர்ணயித்த முழு கூலி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும்.

ஆட்சியர் தலைமையில் 3 மாதத்துக்கு ஒருமுறை, கோட்டாட்சியர் தலைமையில் மாதம் ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, வீட்டுமனை ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x