Published : 06 Oct 2021 03:12 AM
Last Updated : 06 Oct 2021 03:12 AM

கருக்கலைப்பில் பெண் உயிரிழப்பு தனியார் மருத்துவமனைக்கு சீல் :

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பாண்டியங் குப்பத்தை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணான சந்திரலேகா என்பவர், சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் வளர்ச்சி சரியில்லை என்று கூறி கடந்த 27-ம் தேதி சந்திரலேகாவிற்கு கருகலைப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடும் செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின்பு அதிக ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலையில் இருந்தார்.

இதையடுத்து சந்திரலேகாவின் உறவினர்கள் நேற்று முன்தினம் சின்னசேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனிடையே சந்திரலேகா உயிரிழந்துள்ளார். இதையடுத்து சின்னசேலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கருக்கலைப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு உண்டான உரிய அரசு அனுமதி பெறாமல் மருத்துவமனை இயங்கி வந்தது தெரியவந்தது. பின்னர் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், வருவாய்த் துறையினர் மூலம் மேற்படி தனியார் மருத்துவமனையை மூடி சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாரேனும் உரிய அரசு அங்கீகாரம் பெறாமல் மருத்துவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x