குடும்பத்துடன் விஷம் குடித்ததில் - மனைவி, மகன் உயிரிழப்பு, தந்தைக்கு தீவிர சிகிச்சை :

குடும்பத்துடன் விஷம் குடித்ததில் -  மனைவி, மகன் உயிரிழப்பு, தந்தைக்கு தீவிர சிகிச்சை :
Updated on
1 min read

பரமத்திவேலூரில் குடும்பத்தினருடன் விஷம் குடித்ததில் மனைவி, மகன் உயிரிழந்தனர். தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை சேடர் தெருவைச் சேர்ந்தவர் சையத் அக்பர் (60). டிரெய்லர் லாரி பாடி கட்டும் பட்டறை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாத்திமா (55) என்ற மனைவி, சிக்கந்தர் பாஷா (35) மற்றும் பர்கத் (30) என இரு மகன்கள் உள்ளனர்.

இதில் சிக்கந்தர் பாஷா திருமணமாகி வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். பர்கத் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சையத்அக்பர், பாத்திமா, பர்கத் ஆகியோர் வீட்டில் மயங்கிக் கிடந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் மூவரையும் மீட்டு பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் மூவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது.

எனினும், பாத்திமா மற்றும் அவரது மகன் பர்கத் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சையத் அக்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமத்தி வேலூர் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் பிரச்சினையில் சையத் அக்பர் இருந்தது தெரியவந்தது.

கடன் பிரச்சினையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம், என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in