Published : 04 Oct 2021 03:12 AM
Last Updated : 04 Oct 2021 03:12 AM

சேலம் பூலாவரியில் பெற்றோர் நினைவிடம் அருகே - மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜாவின் உடல் நல்லடக்கம் :

சேலம் பூலாவரி கிராமத்தில் மாரடைப்பால் உயிரிழந்த திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான வீரபாண்டி ராஜாவின் உடல் அவரது பெற்றோர் நினைவிடம் அருகே நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுக-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனும், திமுக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான வீரபாண்டி ராஜா (58) நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று வீரபாண்டி ராஜாவின் உடல் அவரது வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்டப் பொறுப்பாளர்கள் செல்வகணபதி, சிவலிங்கம், பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்பி-க்கள் பார்த்திபன், ராஜேஸ்குமார், பொன்னுசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், வீரபாண்டி ராஜாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பின்னர் பூலாவரியில் உள்ள அவரது தந்தை வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் தாயார் நினைவிடம் அருகே வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x