

சேலம்: வன உயிரின வாரவிழாவையொட்டி, சேலத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரினங்களின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில வன உயிரின வாரவிழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரினங்களின் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சேலம் அஸ்தம்பட்டியில் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில், சேலம் டிரெக்கிங் கிளப், சேலம் ரேன்டோனியர்ஸ் கிளப் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
பேரணி 5 ரோடு, புதிய பேருந்து நிலையம், அண்ணா பூங்கா, அரசு கலைக்கல்லூரி வழியாக மீண்டும் அஸ்தம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் கவுதம் சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை உதவி வனப்பாதுகாவலர்கள் கண்ணன், முருகன், வனச்சரகர் நல்லதம்பி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.