Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக - பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை : அரியலூர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன்:

கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஏரிகளை தூர்வார வேண்டும். சுத்தமல்லியை மையமாக கொண்டு கடலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். பருத்தி, மக்காச்சோளத்துக்கு 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து:

யூரியா, காம்ப்ளக்ஸ் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர்கள், உதவியாளர்களை 3 ஆண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்ய வேண்டும். அரியலூரில் உழவர் சந்தையை முழுமையாக விவசாயிகளை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம்:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும்.

தொடர்ந்து, விவசாயிகளுக்கு பதிலளித்த ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்டத்தில் இருப்பில் உள்ள உரங்களின் விவரங்களையும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x